அம்பாள் துதி

அம்மா மதுரை மீனாக்ஷி
அருள்வாய் காஞ்சி காமாக்ஷி
அன்பாய் எனையே ஆதரித்து
அல்லல் களைந்தே காப்பாற்று


அன்னை தேவி பராசக்தி
என்னை படைத்தது உன்சக்தி
வாழ்வைத் தந்து வளம்தந்து
வாழ்க்கைக் கடலின் கரையேற்று

தில்லைச் சிதம்பரப் பத்தினியே
நெல்லையில் வாழ்ந்திடும் உத்தமியே
திருவடி மலரினைத் தொழுதிடுவேன்
திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று

ஓங்காரப் பொருளும் நீதானே
உலகம் என்பது நீதானே
காணும் இயற்கைக் காட்சிகளும்
காற்றும் மழையும் நீதானே

அம்மா தாயே உனைவேண்டி
அழுதிடும் என்னைத் தாலாட்டி
அன்புடன் ஞானப் பாலூட்டி
அகத்தின் இருளைப் போக்கிடுவாய்

உள்ளக் கோயில் உன்கோயில்
உயிரும் மூச்சும் உன்வடிவம்
பேச்சும் செயலும் உன்செயலே
பெருகட்டும் உன் பேரருளே.

-லெ. சோமு. தேவகோட்டை