அம்பிகை அழகு தரிசனம் - திருக்கடவூர்

ஓம் சக்தி

கமுகு பலாவும் வாழையும் நெல்லும் கழனிகளாகும் கடையூரில்
அமிர்தக்டேசர் அருகினில் நின்று அழகு கொளிக்க அருள்மேவும்
உமையவள் தேவி ஒளிவிடும் கண்ணி உதிரநிறத்து மகராணி
இளமையொரு பாதி கருணை வணங்கும் இளகிய சக்தி அபிராமி!

வணிக குலத்துக் கோவலன் வந்து வணங்கி விழுந்ததும் அவன் கோவில்
தணிகை குலத்து மாதவி அண்ணம் கலைகள் பயின்றதும் அவன் கோவில்
தணிகையில் வாழும் குமரனைப் பெற்ற தாயென வந்த மகராணி
அணி அணி யாக அழகு சொலிக்கும் அற்புத சக்தி அபிராமி!

தமிழை எடுத்துக் கவிதை தொடுத்து தலையடி யாகப் பந்தாடி
அமுத மழைத்தேன் பட்டர் கொடுத்தார் அவளது பேரில் அந்தாதி
குமுத முகத்து கோமள வல்லி குறுநகை சிந்தும் மகராணி
மமதை யறுத்து மனிதனைக் காக்கும் மந்திர சக்தி அபிராமி!

காதல் கசிந்து பக்தி மிகுத்துக் காவிரி பாயும் நகரத்தார்
கோதி எடுத்து கோவில் படைத்து கோடி நலத்தை அதில்வைத்தார்
நாத மொழித்தேன் நாயகியாக ஞாயிறு பழிக்கும் மகராணி
வேத முரைக்கும் சக்தி யெல்லாம் மிக்கவள் சக்தி அபிராமி!

குங்கும நதியில் மூழ்கி எழுந்த கோவை நிறத்து பொன்மேனி
சங்கமமாகும் மங்கையர்க் கெல்லாம் ததுவம் சொல்லும் விஞ்ஞானி
கொங்கை முகத்தில் அமிர்த கடேசன் கொஞ்சிடும் காதல் மகரானி
செங்கதிர் காட்டும் வண்ணமுகத்துச் சித்திர சக்தி அபிராமி!

பொன்னி வறண்டு போயினும் கூடப் பூமியின் கீழே நீரோடும்
மன்னிய சோழ மண்டலமெங்கும் மங்கையின் கருனை வேரோடும்
பொன்னிற மார்பும் பூவென முகமும் பூத்தவள் கடையூர் மகராணி
கன்னியின் அழகு மறையா திருக்கும் கண்கவர் சக்தி அபிராமி!

ஆத்தாள் என்னும் செட்டிகள் சொல்லும் அவளை சொல்லும் ஒரு சொல்லே
காத்தாள் இந்த காசினி எல்லாம் காவல் விளைத்து செந்நெல்லே
பூத்தாள் அன்பிற் பொலிந்தாள் இன்பப் போதையில் நிற்கும் மகராணி
பார்தால் போதும் பரவச மாகும் பாரத சக்தி அபிராமி!

எப்படி நோக்கும் நோக்கிலும் அன்னாள் என்றும் இளமை பதினாறு
சொற்படி தானே உலகை இறைவன் சுமந்து நிற்பது வரலாறு
உப்பொடு சர்கரை எது வைத்தாலும் ஒன்றாய் காட்டும் மகராணி
முப்பழமாக மார்புன் முகமும் மூண்டவள் சக்தி அபிராமி!

வல்லிக் கொடியும் வாயிற் கனியும் வண்ணக் கலவை விழியோடும்
கல்லைக் கனியாய் கனியச் செய்யும் காதல் பெருகி நதியோடும்
அல்லித் தண்டு கால்க ளெடுத்து அருள்தர ஓடும் மகராணி
சொல்லி சொல்லித் துதிபார்க் கெல்லாம் சொர்க்கச் சக்தி அபிராமி!

கண்ணகி என்னும் தெய்வம் வந்து காலடி தொட்ட ஒரு தெய்வம்
விண்ணவ ரெல்லாம் தேடி யடைந்து வீடு நிரப்பும் ஓர் செல்வம்
எண்ணி உறங்கிக் காலை விழித்தால் இன்பம் தருவாள் மகராணி
திண்ணம் அவளைக் கண்டால் வெற்றி திடமுள் சக்தி அபிராமி!

கவியரசு கண்ணதாசன்.