அருள்மிகு நடராஜர் பதிகம்

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய


அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே!
ஆதியாய் அநாதியாய்ச் சமைந்த ஜோதி ரூபனே!
மங்களங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனே
மைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள்நடேசனே (ஓம்)

எந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம் தொடுத்த கூரை கோபுரம்
செந்தமிழ்ச்சொல் மந்திரம் திருந்தும் அன்பே ஆகமம்
சிவந்தபாத பங்கயம் உவந்தருள் நடேசனே! (ஓம்)

மன்றிலே எடுத்த கால் என் மனையிலும் எடுத்துவை
மனதிலே நினைத்த நன்மை விரைவிலே முடித்துவை
என்றும் தீமை அணுகிடாமல் ஈசனே தடுத்து வை
ஏத்தும் அன்பர்குழுவில் என்னைச் சேர்த்துவை நடேசனே! (ஓம்)

ஆபயந்த ஐந்தினோடு பால் பழம் பஞ்சாமிர்தம்
ஆலைவாய்க் கரும்பு தெங்கு தேன் சுகந்த சந்தனம்
நீபயந்த யாவையும் நினக்களித்தேன் ஈசனே!
நேர்த்தியாய் அனைத்தும் ஆடி வாழ்த்துவாய் நடேசனே! (ஓம்)

அட்டநாக பூஷணம் அளிக்க வல்லன் அல்லனே
ஆனை மான் சிறுத்தை வேட்டை ஆடவல்லன் அல்லனே
இட்ட மாலை ஆடையோடு தொட்டுவைத்த சந்தனம்
என்றும் நல்கவல்லன் வல்லன் கொண்டருள் நடேசனே! (ஓம்)

வில்லினால் அடிக்கவோ? வீசுகல் பொறுக்கவோ?
மிதித்த போதுகை பிரம்பை மேலும் நான் எடுக்கவோ?
நல்ல பிள்ளை என்னை ஆளும் நாதனும் நீ அல்லவோ?
நாளும் நான் படைத்த சொல்லும் பூவும் கொள்நடேசனே (ஓம்)

ஆடநீ எடுத்ததாய் அறிந்தவர் இயம்புவார்
அல்ல அல்ல என் தலைமேல் சூட என்று சொல்கிறேன்
ஈடில்லாத தெய்வம் நீ இடப்புறம் எடுத்தகால்
எந்த நோக்கில் என்று சொல்ல வந்தருள் நடேசனே! (ஓம்)

மழுவெடுத்(து) எதை விளக்க மன்றுதோறும் ஓடினாய்?
மதியெடுத்த சிரம் இருக்க மத்தனாய் ஏன் ஆடினாய்?
கழுதெடுத்து நடனம் ஆடும் காட்டில் என்ன தேடினாய்
கையில் நான் எடுத்த தூபம் கொள்ளுவாய் நடேசனே! (ஓம்)

எடுத்த தூபம் ஆதியாவும் ஏற்றருள் மகேசனே!
இன்று நான் படைத்த யாவும் உண்ணுவாய் சபேசனே!
தடுத்த பண்டை வினையகற்றித் தாங்குவாய் சர்வேசனே!
சரணம் உன்னையன்றி ஏது? தாங்குவாய் நடேசனே! (ஓம்)

வாழி நீபடைக்கும் தெய்வம் மலரணை அமர்ந்ததாம்!
வகுத்தளிக்கும் தெய்வம் கூட அரவணை கிடந்ததாம்!
ஊழிதோறும் ஐந்தொழில் உவந்து செய்யும் ஈசனே! ஓய்ந்து
சற்றென் நெஞ்சணைக் கண் சாய்ந்து கொள் நடேசனே! (ஓம்)

ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நமரூபனே!
ஓதும் ஐந்து சபையில் ஆடும் பாதனே சங்கீதனே
வாமியாய்த் தலைத்த சிவகாமி காதல் நேசனே
மாறிலாத கருணை நீ வழங்குவாய் நடேசனே (ஓம்)

-அருட்கவி கு. செ. ராமசாமி