ஆண்டி உடையில் அரசன்

வேல் வேல்

பக்கமிரு மாதிருக்கச் சொக்கவெள்ளி வேலெடுத்துப்
பச்சைமயில் உச்சிவரும் வேலனே!-உன்றன்
பஞ்சடியை நெஞ்சழுத்திப் பாற்குடத்தைத் தோளெடுத்தால்
அஞ்சிமிகக் கெஞ்சிடுவான் காலனே

பழநிமலை மீதமர்ந்து பாட்டமுதை வேட்டருந்திப்
பாருலகை காத்தருளும் கந்தனே!-உன்றன்
பால்வடியும் பூமுகத்தை நாள்முடியப் பார்த்திருந்தால்
வேல்முடித்து வைத்துவிடும் பந்தமே

ஆறுபடை வேலனும் ஏறுமயில் மீதெழுந்தால்
கூறுமடி யார்வினைகள் மாறுமே-அந்த
ஆறுமுக வேலவனை ஆண்டியுடை கொண்டவனைப்
பழநிமலை மீதுவந்து பாருமே

ஆண்டியுடை கொண்டிருந்தும் அரசமனம் கொண்டவனை
அண்டியதும் நொண்டிவிடும் துன்பமே-அவன்
ஆறெழுத்து மந்திரத்தின் ஓரெழுத்தை ஓதிடினும்
பாரனைத்தும் பெற்றுயரும் இன்பமே

-டாக்டர் அர. சிங்காரவடிவேலன்