எருவாய் கருவாய் (திருவீழிமிழலை)

எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய் ...... விளைவாகி

இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல

ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா ...... யழியாதே

ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ ...... தருள்தாராய்

முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா ...... ளருள்வோனே

முநிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் ...... விடும்வேலா

திருமால் பிரமா வறியா தவர்சீர்
சிறுவா திருமால் ...... மருகோனே

செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே.