கந்தன் தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ


தாயரசி பார்வதியாள் தரவில்லையோ பாலென்று
தங்கமகன் அழலாமோ சண்முகனே கண்ணுறங்கு(ஆராரோ)

ஓய்யாரப் பாற்குடங்கள் ஒருகோடி தானெடுத்து
மெய்யன்பர்கள் வருவார்கள் மீன்விழியே கண்ணுறங்கு(ஆராரோ)

ஆடிவிளை யாடுதற்கு அழகுப் பொருளில்லையென்று
அழலாமோ வேலவனே ஆரமுதே கண்ணுறங்கு(ஆராரோ)

ஆயிரமாம் காவடிகள் ஆடிவரும் கூடிவரும்
ஆனந்தமாய் ஆடிடலாம் அழகமுதே கண்ணுறங்கு(ஆராரோ)

மாம்பழத்தை அண்ணனுக்கு மாயவனும் தந்ததனால்
மயிலேறி வலம்வந்த மால்மருகா கண்ணுறங்கு(ஆராரோ)

தேன்கொட்டும் அபிஷேகம் செங்கதலிப் பழச்சாறு
சேர்ந்துநிதம் குளித்திடலாம் செவ்வேளே கண்ணுறங்கு(ஆராரோ)

வஞ்சிக் கொடி வள்ளியம்மை வாஞ்சைக்கிளி தெய்வானை
வந்திடுவார் கொஞ்சிடுவார் வடிவேலா கண்ணுறங்கு(ஆராரோ)

கொஞ்சிவிளை யாடுதற்கு மஞ்சள்முக மில்லையென்று
கோமகனே அழலாமோ குமரவேளே கண்ணுறங்கு(ஆராரோ)

ஏறுமயில் ஏறுதற்கும் எங்கும் விளையாடுதற்கும்
ஏங்கியேநீ அழலாமோ எழிலரசே கண்ணுறங்கு(ஆராரோ)

ஆறுபடை வீடிருக்கு அழகுமயில் நூறிருக்கு
ஆடிடலாம் பாடிடலாம் ஆறுமுகா கண்ணுறங்கு(ஆராரோ)

-கவிஞர் குறள் இலக்குவன்