கருப்பர் வாரார்

வாராரய்யா வாராரு
கருப்பரிங்கே வாராரு
வாராரய்யா வாராரு
கருப்பரிங்கே வாராரு


அள்ளி முடிச்ச கொண்டையப்பா
அழகு-மீசை துள்ளுதப்பா
வல்ல வேட்டிப் பட்டுடனே
வாரார் ஐயா ராசாப்போலே(வாராரய்யா வாராரு...)

ஆளுயரம் அரிவாளாம்
அதுக்கேத்த கம்பீரமாம்
காலிலே முள்ளுச் செருப்பாம்
கருப்பனுக்கே தனிச்சிறப்பாம்(வாராரய்யா வாராரு...)

வீச்சரிவாள் கையிலுண்டு
வேகமான குதிரையுண்டு
சுற்றிவரும் பகையழிக்கச்
சுக்குமாந் தடியுமுண்டு(வாராரய்யா வாராரு...)

இடுப்பிலே சலங்கையுண்டு
இடிமுழக்கச் சிரிப்புமுண்டு
வாக்கிலே வலிமையுண்டு
வற்றாத கருணையுண்டு(வாராரய்யா வாராரு...)

கையிலே சவுக்குமுண்டு
கனகமணிச் சலங்கையுண்டு
பாற்கடலில் பள்ளிகொண்ட
பரந்தாமன் நாமமுண்டு(வாராரய்யா வாராரு...)

சந்தனமுண்டு ஜவ்வாதுண்டு
சாம்பிராணி வாசமுண்டு
சம்பங்கி ரோஜாமுல்லை
மணக்குதப்பா இங்கே இப்போ(வாராரய்யா வாராரு...)

-கவிஞர் ஏ.ஆர்.சுப்பையா, நேமத்தான்பட்டி.