கொஞ்சுதமிழ்ப் பாமலை

வேல் வேல்

கொஞ்சுதமிழ்ப் பாமலைக்கும் நெஞ்சமெனும் பூமலைக்கும்
கோலமயில் ஏறிவரும் வேலவன்-அந்தப்
பிஞ்சுமன வேலவனைச் சஞ்சலம் தீர்மூலவனைப்
பேசுவது ஆறெழுத்து மந்திரம்

வெள்ளமெனப் பாடிவரும் வேலவனை நாடிவரும்
வெற்றிமிகு மாந்தரது கூட்டமே-தினம்
கள்ளமிலா உள்ளமெல்லாம் மெள்ள மெள்ள ஓடிவரக்
கால்நடையில் புள்ளிமயில் ஆட்டமே

சாலையிலே தூங்குவதும் காலையிலே தாங்குவதும்
சண்முகனுக் கேற்றதொரு காவடி-நம்
வேலையெல்லாம் விட்டுவிட்டுக் காலைபகல்மாலை யெல்லாம்
வீரநடை போடுவதும் சேவடி

பள்ளயங்கள் போடுவதும் பந்தயமாய் ஓடுவதும்
பாலனுக்குப் போட்டதொரு பாலமே-தினம்
துள்ளிவரும் வேலெடுத்துப் புள்ளிமயில் வாகனுக்குத்
தோலுரியக் கால் நடக்கும் சீலமே

தாங்குவதும் தூங்குவதும் தாளெடுத்துப் போடுவதும்
தந்தினத்தோம் போடுகின்ற தாளமே-தினம்
சங்குமுகம் பாடுவதும் சிங்கமுகன் ஓடுவதும்
சண்முகனுக் கேற்ற தொரு மேளமே

ஆண்டியென உள்ளவனும் தூண்டிலிலே வந்திடுவான்
ஆறுமுக சாமியினைப்பாடு-அவன்
கண்டிக்கதிர்காமமுடன் அண்டியவர் உள்ளமெல்லாம்
காத்திருப்பான் ஆறுபடை வீடு

சாமிமலை பழனிமலை சார்ந்ததொரு தணிகைமலை
சண்முகவி லாசமெனக் கூறு-இந்த
பூமியிலே உள்ளவர்கள் சாமியெனப் போற்றிநிதம்
பூசுவதும் ஆறுமுகன் நீறு

பாரி வளம் மீறிவரப் பக்தரெல்லாம் கூடி வர
பழமுதிரும் சோலையை நீ பாடு-தினம்
ஊறிவரும் பக்தியிலே ஏறிவரும் சக்தியினால்
உயர் அழகர்மலையினையே நாடு

-பொற்கிழிக் கவிஞர் காசி ஸ்ரீ அரு. சோ