கோட்டைக் கருப்பர் கும்மி!

கும்மியடி தமிழ்க் கும்மியடி-அந்தக்
கோட்டைக் கருப்பரைக் கும்மியடி!
நம்பிடக் காக்கும் தெய்வமடி!-அது
நல்லருள் தந்து வாழ்த்துமடி!


திருப்புத் தூரிலே கருப்பரடி-அவர்
தித்திக்க வரும் வீரரடி!
உருவம் பெரிய கருப்பரடி-அவர்
உள்ளம் இனிக்கும் வெள்ளமடி!

வெள்ளைக் குதிரையில் கருப்பரடி-அவர்
வீரம் விளைக்கும் தெய்வமடி!
அள்ளக் குறையாக் கருணையடி-அவர்
அண்டின பேருக் கருள்வாரடி!

சுக்குமாந் தடி வெட்டருவாள்-அவர்
சுறுக்காய் எடுத்து நடைநடந்து
அக்கிமரச் செயல் அழிப்பாரடி!-அவர்
அண்டம் குலுங்கச் சிரிப்பாரடி!

குத்தீட்டி சூலம் கொண்டாடி-அவர்
குதித்து மிதித்து ஓடோடி!
ஏத்திக்கும் தீப்பொறி பரபரக்க-அவர்
எக்காள மிடுவார் புவி சிறக்க!

வானவெளிப் பொட்டல் அவர்வீடு!-நாம்
வாழ்த்தியே நின்றோம் பண்பாடு!
கான மிசைத்துக் கொட்டுங்கடி-அந்த
கருப்பரைக் காண முந்துங்கடி!

சேமங் குதிரைகள் சித்திரமாம்-நம்
சேம நலங்களும் பத்திரமாம்
நாமம் போற்றிடக் கும்மியடி-அந்த
நாதத் தலைவனை நம்பியடி!

இருட்டு நீக்கிய இதயத்திலே-அவர்
எல்லை காட்டுவார் உதயத்திலே!
திருட்டு வேலைகள் தீய்ந்திடவே-அவர்
தீப்பொறி பறக்க விழித்திடுவார்

மையிட்ட கருப்புத் திருமேனி-அவர்
மனமிட்ட பொறுப்பு அருள்ஞானி!
பொய்யிட்ட நெஞ்சில் அன்னியராம்-அவர்
புகழிட்ட வாழ்வின் கன்னியராம்

கோட்டைக் கருப்பரே குலதெய்வம்-அவர்
வேட்டை ஆடிட வருந்தெய்வம்
சேட்டை போக்கும் பெருந்தெய்வம்-அவர்
காட்டைக் கலக்கும் கருந்தெய்வம்!

சங்கிலிக் கருப்பரும் உடன்வருவார்-அவர்
சந்தோஷ எண்ணங்கள் தான் தருவார்!
பொங்கிட அருளும் புகழ்தருவார்-அவர்
போற்றிடக் காத்திடும் தெய்வமம்மா!

குங்குமக் காளியைக் கூப்பிடுவோம்-அவள்
குறைதீர்க்க வருவாள் வாழ்த்திடுவோம்!
பங்கமில்லா அவள் பார்வையிலே-பாவம்
பறந்தோட காண்போம் அருளினிலே!

சூலம் எடுத்தவள் மாகாளி!-அவள்
சுந்தரச் சிந்து பாடுங்கடி!
ஞாலம் காப்பவள் காளியம்மா!-அவள்
ஞானம் காப்பவள் வாழியம்மா!

செக்கச் சிவந்த சேலைகட்டி-காளி
செந்தூரப் பொட்டு நெற்றியிட்டு
பக்கத்தில் வந்து காத்திடுவாள்-பக்திப்
பாட்டுக்குள் சிந்தாய்ப்பூத்திடுவாள்!

-சி. என். நாச்சியப்பன்