சிங்கை முருகன் பாமலை

ஒருகால் நினைத்தாலும் இருகால் சிலம்பதிர
ஓடோடி வரும் ஐயனே
ஓராறு படைவீடு போதாமல் ஏழாக
என்னுள்ளம் சேர்ந்து விட்டாய்.
கருவாய் புகுந்த நாள்முதலாய் இந்நாள்வரை
கருத்திலே கலந்து விட்டாய்.
காதலால் உன் பெருமை ஓதுவேன் இனி
எதிர்காலமுனது வசமே
வருவாய் தொழில்தேடி வந்தவர் மலர்மாலை
வரிசைபெற வைத்த பொருளே
வந்த இடம் நிலையான சொந்த இடம்
ஆக்கிய வள்ளலே மூலமுதலே
வருவாய் எழுந்தருளி தருவாய்என்விண்ணப்பம்
செவி ஏற்றருள் முருகனே
சிங்கப்பூர் நகரிலே குடிகொண்ட தெய்வமே
தெண்டாயுதக் கடவுளே!

கால் நோகும் எங்களது மேல் நோகும்
என்றுதான் காடுமலை நீக்கினாயோ
கருத்தாய் உனைப்போற்றும் திருத்தன வணிகரின்
கவின் கோயில் தங்கினாயோ
வேல்நோக்கி வள்ளியின் மேல்நோக்கம் கொண்டநீ
வேலிலே விந்தை செய்து
மீனாட்சி சொக்கருடன் தானாட்சி செய்யவே
மேன்மையாய் இங்கு வந்து
பால்பழம் தேனுடன் பன்னீரும் கொண்டுமே
நீராட்டும் பக்தருக்குப்
பரிவாகப் பலகோடி வரம்தரப் பாங்குடன்
பால தெண்டாயுதனென
சேல்நோகு கன்னியாள் திருப்பரங்குன்றிலே
தெய்வானை காத்திருக்க
சிங்கப்பூர் நகரிலே குடிகொண்ட தெய்வமே
தெண்டாயுதக் கடவுளே!

அப்பனே உனைநான் காண வருவேன்நெஞ்சினிலே
அன்புமலர் கொண்டு வருவேன்
அதுவேண்டும் இதுவேண்டும் எனஉன்னை ஒருபோதும்
அல்லல் செய்யாது தொழுவேன்
தப்பாமல் உன்னையே ஏத்துவேன் தயாமுதல்
என்றுனைச் சாற்றி நிற்பேன்
தெண்டாயுதத்தானின் தாள்மலர் சதமென
தஞ்சமாய்ப் பற்றி நிற்பேன்.
எப்போதும் உன்னையே நம்புவேன் வம்புஏன்
ஏது செய்தாலும் அகலேன்
என்னையும் திருவடிக் கன்பனாய் என்றுமே
எண்ணுவாய் வேறு புகலேன்
செய்யாதமேனிலை சிந்தை யார்தனவணிகர்
திருவுள்ளம் கொண்ட குமரரா
சிங்கப்பூர் நகரிலே குடிகொண்ட தெய்வமே
தெண்டாயுதக் கடவுளே.

ஆற்றுப் படைகேட்டு அன்று நக்கீரனை
அருஞ்சிறை திறந்து விட்டாய்
அருணகிரி நாவிலே அழகுத் தமிழாகநீ
அட்டமா சித்தி தந்தாய்
பேற்றியலுயர் ஒளவைப் பிராட்டியுடன் விளையாட
பிள்ளையாய்க் கனிகள் தந்தாய்.
பொய்யாத கானத்திலே பொய்யாமொழிப் புலவன்
பேதமை நீக்கி விட்டாய்
சாற்றுக்கவி மாலைதரு கூத்தர்க்கு அன்றுநீ
தங்க மணிமாலை தந்தாய்
சாமிஉன் அருளாலே வந்ததொரு ஊமையை
சகலகலை உணர வைத்தாய்
தேற்றிஎமை ஆட்கொள்ளும் தெய்வமே எம்மீது
திருவுள்ளம் இறங்கி அருளாய்
சிங்கப்பூர் நகரிலே குடிகொண்ட தெய்வமே
தெண்டாயுதக் கடவுளே.

கருணாகரக் கடவுள் எனவேதம் போற்றிடும்
கந்தனே உமை மைந்தனே
கவியுகக் கடவுளே கண்கண்ட தேவனே
கருணை முகஅர விந்தனே
அருணகிரி பாவிலே நடமிடும் பாதனே
ஆனந்த சங் கீதனே
ஆதாரம் ஆறினும் மேலான தத்துவ
அதிதீதனே குரு நாதனே
சரணமென வந்தவர் மரணபயம் போக்கிடும்
கிரணக் கலாப மயிலாய்
தருணமிது எமையாள வருகவெனப் போற்றினோம்
சாமிநீ தங்கி அருள்வாய்
திரணமென யாவையும் உதறி உன்பதமலர்
திடமாகப்பற்றி நின்றோம்
சிங்கப்பூர் நகரிலே குடிகொண்ட தெய்வமே
தெண்டாயுதக் கடவுளே.