நன்மையில் முடிந்த கலகம் (ஆனந்த களிப்பு மெட்டு)

நாதந்த நாதந்த நாநா, தந்த
நாதந்த நாதந்த நாதந்த நாநா


சிவனுக்கு அழகான குடும்பம் - பெற்றோர்க்கும்
பிள்ளைகளுக்கும் எப்பொழுதும் இன்பம்.

நாரதரும் ஓர்நாளில் வந்தார் - கூடவே
ஒற்றைப்பழத்தையும் கொண்டிங்கு தந்தார்.

நலம் தரும் பழமிது என்றார் - இதனால்
பற்பல நன்மைகள் வரும்தானே என்றார்.

சிவனுமே மகிழ்ச்சியிலே திளைத்தார் - நம்
குடும்பத்திற்கு இதனால் நன்மையென்று நினைத்தார்.

அய்யாவே கொஞ்சம் பொறுங்கள் - நான்
சொல்வதை முழுதாக இப்பவே கேளுங்கள்.

ஒற்றைப்பழமிது என்றார் - இதை
ஒருவரே உண்பது முறையென்று சொன்னார்.

சிவன் மனதில் வந்ததே குழப்பம் - இரண்டு
பிள்ளைகளில் யாருக்கு யாரிங்கே இளப்பம்.

நாரதர் வந்தாலே கலகம் - நம்ம
குடும்பத்துக்கு வந்ததே சோதனைக்காலம்.

பிள்ளைகளுக்கு போட்டியை வைப்போம் - இதில்
எவர் வென்று வருகிறார் என்றுதான் பார்ப்போம்.

உலகத்தை மூன்று முறை சுற்றி - யாரிங்கு
வருவாரோ அவருக்குத்தான் வெற்றி.

முருகனும் மயில் மீதில் ஏறி - உலகத்தை
சுற்றி வர சென்றாரே தாவி.

அப்பாவி பிள்ளையார் முழித்தார் - எலிமீதில்
ஏறியே நகர்வதற்க்கு முயன்றார்.

எலியுமே நகருவதாய்க்காணோம் - எப்படித்தான்
போட்டியிலே வெற்றி பெறப்போறோம்.

தாய்தந்தை தானே என் உலகம் - அவர்களை
சுற்றி நான் வந்தாலே போதும்.

சிவனுமே உளமகிழ்ந்து போனார் - பிரியமுடன்
பிள்ளயாருக்குப் பழத்தையும் தந்தார்.

பிள்ளையார் போட்டியிலே வென்றார் - மகிழ்வாக
பழத்தையும் உண்டுதான் களித்தார்.

முருகனும் திரும்பியே வந்தார் - நடந்ததை
கேட்டு கோபம் மிகக் கொண்டார்.

இப்படி செய்வதா நியாயம் - முருகன்
நெஞ்சிலே நேர்ந்ததே மாறாத காயம்.

இளையவன் என்பதால் தானே - இப்படி
செய்தீரே எல்லோரும் என்னை.

தாய்தந்தை அண்ணனையும் மறந்தான் - உறவென்று
உள்ளவர் அனைவரையும் துறந்தான்.

பூண்டினான் ஆண்டியின் கோலம் - அவன்
பழநி மலை தேடி சென்றது வேகம்.

அன்றுமுதல் இன்றுவரை முருகா - பக்தருக்கு
வேண்டும்வரம் தருபவன் நீதானே மருகா.

கலகமும் நன்மையிலே முடிந்து - நாம்
படிப்பதற்க்கு நல்ல பாடங்கள் தந்து.

அதனாலே பிள்ளைகளே கேளும் - தாய் தந்தை
போற்றினால் வெற்றியே சேரும்.

அழகு சுந்தரம், 2009