செந்தில் ஆண்டவன் தரிசன மகிமை

வீதிசுற்றிக் கீழ்புறமும் கடலுங் கண்டேன் அரோகரா
விஸ்தாரக் கொடிமரமு மங்கே கண்டேன்
ஆதியெனும் மூலமதை அங்கு கண்டேன்
அடியேனும் செந்தில்நகர் வலமாய் வந்தேன்
நீதிபுகழ் கோபுரமேற் புரத்திற் கண்டேன்
நிச்சயமாய் உனதழகைக் காண வேண்டி
ஆதியெனுங் கடற்கரையில் வந்து நின்றே
அதிரூப தெரிசனங் கண்டருள் பெற்றேனே! 1

மந்தாரை பிச்சிமுல்லை வனமும் கண்டேன்
மணல்மேட்டு குவட்டழகு மலையுங் கண்டேன்
வந்தவர்நோய் பிணிதீர்க்கும் வளமுங் கண்டேன்
வருந்துகின்ற அடியார்க்கு வரமீயக் கண்டேன்
சிந்தா நவமணிவிளக்கு ஒளியுங் கண்டேன்
திருச்செந் தூராதிபனைக் காணவென்று
அந்தரமாய்க் கடற்கரையில் வந்து நின்றே
அதிரூப தெரிசனங்கண்டருள் பெற்றேனே! 2

நாழிநல்ல கிணறுதன்னை நானுங் கண்டேன்
நன்மைபெற தீர்த்தமது ஆடிக்கொண்டேன்
வாழிசொலு மறையோர்கள் தன்னைக் கண்டேன்
மண்டபமுந் திருமதிலுஞ் செந்தூருங் கண்டேன்
கோழியெனுஞ் சேவல்மயில் தன்னைக்கண்டேன்
குமரனிரு தாளிணையைக் காண வென்று
ஆழியெனும் கடற்கரையில் வந்து நின்றே
அதிரூப தெரிசனங் கண்டருள் பெற்றேனே! 3

மூன்றுசுத்து மண்டபமுஞ் சுற்றிப் பார்த்தேன்
முன்னாலே வீரபத்ரன் தன்னைக் கண்டேன்
நானுமே மலைக்குடவு பெருமாள் கண்டேன்
நல்லவள்ளி சன்னதியும் பிறகு கண்டேன்
தேனுடன் பாலபிஷேகம் செய்யக் கண்டேன்
சிவனார் தம் பாலகனைக் காணவேண்டி
ஆனதொரு கடற்கரையில் வந்து நின்றே
அதிரூப தெரிசனங் கண்டருள் பெற்றேனே! 4

ஆறுமுக நயினார் தன்னழகு கண்டேன்
அவருடைய சண்முகவி லாசங் கண்டேன்
கூறுமடி யார்கள் வினை தீர்க்கக் கண்டேன்
குன்றுருவ வேல்வாங்கி நிற்கக் கண்டேன்
வேறுவினை யணுகாம லிருக்கக் கண்டேன்
வேலவனார் தம்பதத்தைக் காண வென்று
ஆறுதலாய் கடற்கரையில் வந்துநின்றே
அதிரூப தெரிசனங் கண்டருள் பெற்றேனே! 5

மங்களம்சேர் தெய்வானை தன்னை கண்டேன்
மதகரியும் வாசலிலே வரவுங் கண்டேன்
பங்கயஞ்சேர் பன்னிருகை வேலுங் கண்டேன்
பதைக்கமுத்து சரப்பளிகள் தன்னைக் கண்டேன்
தங்கமயக் கோபுரத்தில் தீபங் கண்டேன்
சங்கரனார் பாலகனைக் காண வேண்டி
அங்கசங்கமான கடற்கரையில் வந்து நின்றே
அதிரூப தெரிசனங் கண்டருள் பெற்றேனே! 6

மாசி மாதம் திருவீதி சுத்திவரவுங் கண்டேன்
மனிதர்க்கெல்லாம் மடத்திலன்னம் வழங்கக் கண்டேன்
தேசிக்காய் சப்பரத்தின் சாயல் கண்டேன்
தினந்தினமும் பூச்சரங்கள் தூவக் கண்டேன்
வாசனையாம் பெரியோர்கள் தன்னைக் கண்டேன்
வள்ளியுட கணவனை நான் காணவென்று
ஆசையாய் கடற்கரையில் வந்து நின்றே
அதிரூப தெரிசனங் கண்டருள் பெற்றேனே! 7

மாசிமகம் ரதமேறி வரவுங் கண்டேன்
மனிதரெல்லாம் கூடிவடம் பிடிக்கக் கண்டேன்
தேசிக்காய் சப்பரத்தின் சாயல் கண்டேன்
திருவருளும் பூச்சரங்கள் தொங்கக் கண்டேன்
நீதிபுகழ் சண்முகவி லாசங் கண்டேன்
நிச்சமாய் உனதழகைக் காண வேண்டி
ஆதியெனும் கடற்கரையில் வந்து நின்றே
அதிரூப தெரிசனங் கண்டருள் பெற்றேனே! 8

கஞ்சமலர்த் தாளிணையை நானுங் கண்டேன்
கதிர்வேலுஞ் சூலமுமுன் கையிற் கண்டேன்
செஞ்சமதிர் வேதியர்சம் பத்துங் கண்டேன்
தினந்தினமும் சந்தனாபி ஷேகம் கண்டேன்
வஞ்சமெனும் மாயமதை நீக்கக் கண்டேன்
மனதறிய வுந்தனை நான் காண வேண்டி
அஞ்சலெனும் கடற்கரையில் வந்து நின்றே
அதிரூப தெரிசனங் கண்டருள் பெற்றேனே!9

செகத்திலுள்ளோ ருன்பாதம் பணியக் கண்டேன்
தினந்தினமும் மறையோர்கள் துதிக்கக் கண்டேன்
சுகத்திலேநா னடியேனிருக்கக் கண்டேன்
துயரமெல்லா முன்பாதம் செல்லக் கண்டேன்
மகத்திலே ரதத்திலே வருமழகு கண்டேன்
மனதறிய உனதழகைக் காண வேண்டி
அகத்தியமாய்க் கடற்கரையில் வந்து நின்றே
அதிரூப தெரிசனங் கண்டருள் பெற்றேனே!10

வண்ணமயில் வாகனத்தில் வரவுங் கண்டேன்
மறையோர்கள் தினமுமன்னம் புசிக்கக் கண்டேன்
திண்ணமுடன் வள்ளிமனை தனையுங் கண்டேன்
தினந்தினமும் பள்ளியறை சேரக் கண்டேன்
கின்னரர்தம் பூர்வீணை முழங்கக் கண்டேன்
கிலேசமெல்லாம் தீர்ந்து உன்னைக் காண வேண்டி
அன்னம்போல் கடற்கரையில் வந்து நின்றே
அதிரூப தெரிசனங் கண்டருள் பெற்றேனே!11