மாமலையே மாமலையே

மாமலையே மாமலையே தென் பழநி மாமலையே
மாமலையே மாமலையே தென் பழநி மாமலையே


ஞானம் செறிந்த மலை நல்லோர்கள் நாடுமலை
தானம் சிறக்குமலை தருமமிகுந்தோங்கும் மலை
மோனத் திருமுனிவர் முற்றுதவம் செய்த மலை
தீனர்க் கருளுமலை தென்பழநி மாமலையே

நாட்டில் சிறந்த மலை நானிலமும் போற்றுமலை
பாட்டில் சிறந்த திருப்புகழ் பாடிப் பரவுமலை
வீட்டைக் கொடுக்குமலை மெய்ஞானம் நல்குமலை
தேட்டைக் கொடுக்குமலை தென்பழநி மாமலையே

ஒருமாங் கனிபெறவே உலகமெல்லாம் சுற்றிவந்து
அருமா தவக்கோலம் பூண்டிருக்கும் ஆண்டிமலை
பருமா மதகரிகள் பசியகமை உண்டுமகிழ்
திருவா வினன்குடியாம் தென்பழநி மாமலையே

சீதையினைத் தேடிவந்த ஸ்ரீராம தூதரினம்
பாதையினைத் தான்மறந்து பசிக்குணவு தேடுகையில்
மாது வள்ளி தான்புகுந்த மால்மருகன் வீடறிந்து
போதும் வரை உண்டுமகிழ் பொன்பழ்நி மாமலையே

எந்தாயும் நீயல்லவோ எனக்குற்ற துயரனைத்தும்
அந்தாரணி யினிலே யாரிடத்தில் போயுரைப்பேன்
கந்தா எனக்கதறி கசிந்துருகி வேண்டுபவர்க்கு
இந்தா பிடிவரமென் றீயுமலை பழநிமலை

சந்தனம் மணக்குமலை ஜவ்வாது கமழுமலை
செந்தமிழ்ப் பாமுழக்கம் திக்கெட்டும் எட்டுமலை
கந்தருவர் வந்தினிய கானம் இசைக்குமலை
சிந்தைக்கினிய மலை தென்பழநி மாமலையே

பேராளும் மாவணிகப் பிள்ளைகளும் பெரியோரும்
ஏராள மானவர்கள் இருந்தொலை தூரம் நடந்து
சீராகக் காவடிகள் செலுத்த நல்லருளுமலை
பேரார் பழநியப்பன் பிறந்தத் தமிழ்மலையே

இடும்பன் எடுக்குமலை இன்னலெல்லாம் தீர்க்குமலை
கடம்பன் இருக்குமலை கருணைமழை பெய்யுமலை
தடம்புரளா வாழ்க்கையினைத் தனவணிகர்க்கீந்து மனம்
திடம்படவே வைக்குமலை தென்பழநி மாமலையே

வீடெல்லாம் பக்திமனம் வீதியெல்லாம் பக்திமனம்
காடெல்லாம் பக்திமனம் கழனியெல்லாம் பக்திமனம்
நாடெல்லாம் பக்திமனம் நாடிவருவோர்கள்
பாடெல்லாம் நீக்கியிருள் பாலிக்கும் பழநிமலை

அண்ணாமலைக் கவிஞன் அருள்காவடிச் சிந்தை
பண்ணோடு பாட பலர் காவடியாட
தன்னார் தடங்கருணை தான்புரிந்து வாழ்வளிப்பான்
கண்ணா ரிரண்டுடைய கவின்பழநி வேலவனே