தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா
அரோகரா
தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா
தங்க நிறச்செங்கதிர் போல் மின்னும் வேலா
அமிழ்தூறும் ஆறுமுகம் அமைந்த கோவே
அன்பூறும் மனந்தோறும் மலரும் பூவே
உமிழூறும் உன் பெயரைச்சொல்லி சொல்லி
உள்ளுருகி வருகின்றோம் வினையைத்தீர்க்க
சிமிழுக்குள் குங்குமம் போல் பழனியப்பா
சிந்தைக்குள் முகம் காட்டி சிரிப்பாயப்பா

விலைவாசி போலுயர்ந்த மலைகள் தோறும்
வினைவாசி குறைந்தொழிய விளங்கும் வேலா
அலைவீசும் திருச்செந்தூர்க்கடலைப் போல
ஆயிர நூறாயிரமாய் அன்பர் கூடி
மலைவாழ உனைக்காண நடையைக் கொண்டோம்
மனவாழை அன்பென்னும் கனியைச் சிந்தக்
கலைவாழும் பழநி மலை ஆண்டியப்பா
கதிகாட்டி மனங்களிலே கனிவாய் அப்பா

சீர்தோறும் சிறந்து வரும் தமிழுக்குள்ளே
தினந்தோறும் குளிப்பதனால் சிவந்த வேலா
கார்தோய வளர்ந்து வரும் மலையின் மேலே
கணந்தோறும் வாழ்வதனாற் பொழியும் கையா
நீருயர மலர்கின்ற பூவைப் போல
நெஞ்சுயர மலர்பவனே உன்னைக் காண
ஊர் கூடி வருகின்றோம் பழநியப்பா
உளந்தேடி கால்பாவி ஒளிர்வாய் அப்பா

வழிநெடுகப் பலகாரம் தந்து நிற்பார்
வாயார் உன் புகழே பாடி நிற்பார்
ஒளி பெறவே உன்னருளை போலி னிருக்கம்
உண்ணீரும் இளநீரும் உதவி நிற்பார்
களிபெருகி உன்னடியார் செல்லும் காட்சி
கலி தீர்க்கும் உன் இனிய காட்சி என்பார்
வழி நடப்பார் எல்லோரும் பழநி யப்பா
வழிநடக்க மன்ந்தோறும் மலர்வாய் அப்பா

முருகப்பா வேலப்பா பழனியப்பா
முத்தமிழால் வைதாலும் உவந்து நெஞ்சம்
பருகப்பா தருகின்ற பாடல் எல்லாம்
பண்புடையார் சிறந்தோங்க பார்ப்பாயப்பா
முருகப்பா கந்தப்பா உயிருக்குள்ளே
உயிரப்பா என விளங்கும் ஒப்பில்லப்பா
திருகப்பா வேரோடு வினையை என்று
சேவிப்பார் சிந்தையிலே திகழ்வாயப்பா

கதிர்காட்டும் பச்சை நிறக் கழ்னியெல்லாம்
கண்காட்டும் உன் மயிலின் தோகை காட்டும்
முதிர்காட்டும் தன் குலையால் வளைந்த தென்னை
முனவணங்கும் உன்னடியார் முதிர்ச்சி காட்டும்
புதிர்காட்டும் உலகத்தில் அன்பே ஆண்டால்
புழுவுடலும் உன்னருளின் புனிதம் காட்டும்
குதிகாட்டும் நீரருவி மலையில் வாழ்வாய்
குறை நீக்கும் உன்னருளிற் குளிக்கச் செய்வாய்

பாலான வெண்ணீற்றில் படியும் போது
பழமான உன் மேனி பளிங்காய்த் தோன்றும்
மேலான சந்தனத்தில் விளங்கும் போது
விரிகதிரோன் முக்ஞ்சிவந்து வெட்கிப்போவான்
காலான தாமரையில் பாலும் தேனும்
கரைபுரண்டு நிற்கையிலே கடலுந் தோற்கும்
வேலா உன் பேரழகைப் பழநிக் குன்றில்
விரைந்துண்ண வருகின்றோம் விருந்து வைப்பாய்

தாய் பிரிந்த குழந்தைக்கு தாயே ஆவாய்!
தாளிழந்த முடவனுக்கு காலே ஆவாய்!
வாயிழந்த ஊமைக்கு வாயே ஆவாய்!
வகையிழந்த ஏழைகளின் வங்கி ஆவாய்!
நோயுற்ற உடலுக்கு மருந்தே ஆவாய்
நோந்தழுதால் முந்தி வரும் கந்த வேளே!
சேய்காண வருகின்ற தாயைப் போலத்
திசைநோக்கி வருகின்றோம் தினமும் காப்பாய்

வடிவேலா என்னாத வாயும் வாயோ?
மயிலேறும் உனைக்காணாக் கண்ணும் கண்ணோ?
படியேறி வாராத காலும் காலோ?
பண்பாளன் பெயர் கேளாக் காதும் காதோ?
அடிமலரை வணங்காத கையும் கையோ?
அருள் மனத்தை நுகராத மூக்கும் மூக்கோ?
படிமீது மானிடராய் வாய்த்த தோற்றம்
பயன் பெறவே அருள் கொடுப்பாய் பழநி யப்பா


வேலெடுத்த உன்னருமைப் பெயரெடுத்தால்
வினையெடுத்த இப்பிறவி நடையெடுக்கும்
பாலெடுத்த உன்முகத்தைப் பார்த்திருந்தால்
பசியெடுத்த அன்பருயிர் பண்பெடுக்கும்
வாலெடுத்த உன்மயிலின் வனப்பை
வனமெடுத்து வாழ்க்கையிலே வண்மை மயங்கும்
காலெடுத்தான் திருமகனே பழநியப்பா
கையெடுத்து வருவோரைக் காப்பாயப்பா

முனைவர் அர. சிங்காரவடிவேலன், கண்டனூர்