சவ்வாது புலவர் இயற்றிய கொடுமளுர் முருகன் பதிகம்

பூ மேவு சண்முக விலாசமும் மீராறு
புருவமும் கிரீடமுடியும்
பொட்டுநுத லும்கனக குண்டலமும் அருண்மாரி
பொழியும் ஈராறு விழியும்
வாய்மேவு செம்பவள வாய்மந்த காசமும்
மாலையணியுங் கழுத்தும்
வாகுகே யூரமும் ஈராறுபுய முங்கையும்
வடிவேலும் அபயகரமும்
தாமேவு மெஞ்ஞோப வீதமணி மார்பமும்
சாத்துதிரு வுத்தரியமும்
தாமரைப் பாதமுந் தமியனேன் காணப்ர
சன்னமாய்க் காட்சி தருவாய்
கோமேவுமி ந்திரன் முதலமரர் தொழவவுணர்
கோனுயிர் குடித்ததளவாய்
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே

வளர்தரு திருப்பரங் குன்றுதிரு வேரகம்
வயலூர் திருக்குடந்தை
மாயூர கிரிகுன்று தோறாடல் சோலைமலை
வளர் சுப்ரமணிய் பேரூர்
களந்தையரு ணாசலம் விராலிமலை தோகைமலை
கதிர்காமம் வையாபுரி
கங்கைநதி பாய் பழநி செந்தூர் திருத்தணிகை
கல்லூர் விரூபாட்சி சீர்
அளந்திடுங் காவளுர் வேங்கட செங்குளஞ்(ம்)
(அ)மைந்தபே ரூராதியாம்
அற்புதத் தலமேவு நாயகா தற்சமயம்
அன்புவைத் தெனையாளுவாய்
குளந்தரு கணானுக்கு மெஞ்ஞான தேசிகா
கூவிடும் காலாயுதா
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே

சரவணபவா கனகமயில் வாகனா அசுர
சங்கார கோலாகலா
தகரேறு காங்கயா பரமகுரு நாயகா
சண்முகா கார்த்திகேயா
அரவணை முராரி மருகா கோடி சூரியப்ர
காசவருள் வாசாலகா
யானைமுகனுக்கிளைய வேலாயுதா தெய்வ
யானை புணர் சுப்ரமணியா
பிரணவச டாட்சர மகா மந்தர தந்திர
ப்ராதாபா குறத்தி கணவா
பெண்ணரசி கன்னிதிரு சூலிநெடு நீலியுமை
பெற்றுபுத் திரவிசாகா
குரவணையு நின்பாத சேவைதந் தென்னையாட்
கொள்ளுகதிர் காமநாதா
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே

சந்தன விருட்சமும் கற்பக விருட்சமும்
தங்கப்ர காசமான
சந்தான தாருவும் மந்தாரமும் தெய்வ
தாருவும் பாரிசாத
சுந்தர விருட்சமும் சண்பக விருட்சமும்
சோதியும் சாம்ப்ராணியும்
சூதமர மும்பலா வாழைமர முக்கனி
துலங்குவட வாலெனச் சொல்
பைந்தரு விருட்சமும் குங்கும விருட்சமும்
பார்த்திப விருட்சவகையும்
பாதிரி விருட்சமுங் மொட்டுடை விருட்சமாப்
பாரிற்ப்ர சித்தியாகிக்
கொந்தமர் விருட்ச நிழல் வந்துவிளை யாடுனது
கோலத்தை யென்ன சொல்வேன்
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே

நக்கனரு ளால்வந்து மனவேக ரதமேறி
நால்வாய் முகத்தாருகன்
நல்வச்ர வாகங்கி முகவனுட னேமேக
நாதனாம் பானு கோபன்
எக்கலிடு மூவாயி ரம்புதல்வர் மந்திரிகள்
ஏழாயிரத்து நால்வர்
எதிரேறு சிங்கமுகன் சதிசூரன் சுரேந்
திரன் படைத் தலைவர் முதலோர்
திக்கதல மிக்கவரு அசுரரொடு சூரைச்
செயித்து நட மாடுமயில்மேல்
தேவர் சிறை மீட்கவேயேறி வரு நின்மகிமை
செப்புதற் கெளிதாகுமோ
குக்குடவி நோதனே (ஆ) யாறுமுக கம்பீர
கோதண்ட பாணிமருகா
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே

ஆடாது சித்து விளையாடலாம் திக்கு விச
யம் செய்து வெற்றிபெறலாம்
ஆசுகவி மதுரகவி சித்ரகவி தாரகவி
யானந்த மாய்ப் பாடலாம்
ஈடாரு மில்லாத தேவரை யழைத்துடன்
இரும்பையும் பொன்னாக் கலாம்
இந்த்ர சாலத்துடன் மயேந்த்ரசா லங்கள்செய்
தெங்கும்ப்ர சித்திபெறலாம்
தாடாவு மிருகத்தின் வாய்கட்டி வேட்டையின்
தந்திரங்களும் புரியலாம்
தாழாத இவையெலாம் அய்யநின் னருள் பெறுந்
தன்மைக்கு நிகராகுமோ?
கோடானு கோடிமனு வந்தடி பணிந்திடுங்
கோதகல் சுயம்பிரகாசா?
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே

சமபுவுக் குபதேசம் வைத்தாய் அன்றியுஞ்
சம்பந்த மூர்த்தியாகிச்
சமணர்களை வெங்கழுவி லிட்டாவா ! நித்தியத்
தத்துப்வப்ர காசமாக
நம்பினவர் அன்புகொண்டபு அரவர் நினைத்தவரம்
நல்கியே யாதிரித்தாய்
நக்கீர தேவர்சிறை மீட்டாய் சிறைக்குளே
நான்முகத் தவனைவைத்தாய்
உம்பருக் கும்தயவு செய்தாய் குறத்திபால்
ஓங்குசெவ் வேங்கைமரமாய்
உற்றருளி னாய்அருண கிரிநாதர் செந்தமி
உகந்தாய் உளத்திருந்து
கும்பமுனி வனதனக் கருள் செய்தாய் நின்மகிமை
கூறுதற் கெளிதாகுமோ?
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே

சித்திமதி லுந்திருப் பாதமே கெதியென்று
சிந்திக்கும் அன்பருக்குச்
செல்வமுண் டாம்சகல கல்வியுண் டாம்புவன
தேசப்ர சித்தியுண்டாம்
நித்திய சரீர்முண் டாம் இலக் குமிகருணை
நிலவுங் கடாட்சமுண்டாம்
நிகரில் பலலெட்சசது ரங்கபல முண்டாம்
நெடுஞ்சமலரில் வெற்றி யுண்டாம்
புத்ரசந் தானமுண் டாம்சகல பாக்கியப்
போக போக்கிய முண்டாம்
புத்தியுண் டாநல்ல முத்தியுண் டாம்முனது
புகழினை யுரைக்கலாமோ
கொத்தடிமை குடியடிமை யாமுழுது என்னையாட்
கொண்ட கதிர் காமவேலா
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே

பாரமாய் உன்பாத சேவைசெயும் அன்பரைப்
பாவந் தொடர்ந்திடாது
பஞ்சகலி நாடாது கண்ணேறு நாவேறு
பஞ்சபா வந்தொடாது
சோரசா ரக்கிரியை சாமானி யப்பில்லி
துட்டமிரு கம்தொடாது
சொற்பனமு மாதாளி பண்ணாது பொறிவிடந்
தொடராது பூதம் அகலும்
கூரான வன்பிணிகள் நேராது நின்ம்கிமை
கூறுதற் கெளிதாகுமோ
குக்குட விநோதனாஞ் சமரமுக கெம்பீர
கோலவடி வேலாயுதா !
கோரரண வீர செய நீர வடியார்க்குதவு
குல தெய்வ மெஞ்ஞானமே
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே

கையிலாச நாதர்நித் தியகலி யாணிபதம்
கருணா கடாட்சமுண்டாம்
கல்வாச னாட்டிளசி மேவுபெரு மருதூர்
கதிக்குநக ரப்ரதாபன்
செயலாளி திண்ணப்ப வணிகன் அருளால் வந்து
சென்மித்த வெள்ளையப்பன்
செம்மைசேர் தருராம் நாதமதி யூகிதரு
செல்வவான் பழனியப்பன்
தயைமேவு சுப்ரமணி யாவென்று கூப்பிடச்
சந்தான பாக்யநல்கிச்
சந்தாங்க முங்கொடுத்து எத்தேச காலமும்
தற்காத்த தெய்வம் நீயே
குயில்கூவு சோலைமலை செந்தூர் திருப்பரங்
குன்றிலுறை யுங்க டம்பா
கோகனக வாவிபுடை சூழ்கொடு மளுர்மேவு
குமரகுரு பரமுருகனே