பெரிய கருப்பண்ணசாமி அருள்வேட்டல்

அரோகரா

சீராரும் செந்தமிழால் தினந்தோறும் மாலைகட்டி
வீராதி வீரா! பெரிய கருப்பண்ணனே!
பாரோர் பணிந்தேத்தும் பாதமலரிற் சூட்டுகிறேன்
தீராத நோய்தீரத் திருவருளைத் தாருமய்யா!

மீசை அழகை மேல்வேட்டி ஒப்பனையை
வாசமலர் மார்பழகை வாங்கரிவாள் நேர்த்தியினை
ஓசைத் தமிழாலே உள்ளுருகித் தெண்டனிட்டேன்
வாசலுக்குக் காவலனாய் வந்தருள வேண்டுமய்யா!

பிறந்த குலத்தைப் பேணிவரும் உன்னடியை
மறந்த பிழையை மன்னித்தே உன்மகனைக்
கரந்தழுவ வேண்டுமெனக் கண்ணீரால் கவியெழுதிப்
பறந்துவரும் நாயேனைப் பார்த்தருள வேண்டுமய்யா!

அறியாமற் பிழைசெய்தால் ஆட்டிவைத்துப் பார்க்காதே!
தெரியாமற் பிழைசெய்தால் சிறியவரை வருத்தாதே!
புரியாமற் பிழைசெய்தால் புத்திரரை அலைக்காதே!
பரிமேலே வந்தருளிப் பாதுகாக்க வேண்டுமய்யா!

பிண்டம் அளிப்பவனே! பெரிய கருப்பண்ணனே!
மண்டை பெருத்தவுடன் மறந்தபிழை பெரும்பிழைதான்
சண்டையெனக் கருதாதே! சந்நிதிக்கு வந்தடியேன்
வண்டமிழாற் பாடுகிறேன் வாக்கருள வேண்டுமய்யா!

வெள்ளைக் குதிரையிலே வெட்டரிவாள் தோளேந்தித்
துள்ளிவந்து துணையிருக்கும் தோள்பெருத்த கருப்பண்ணனே!
வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வணங்குகிறோம்
பிள்ளைகளைக் காப்பாற்றப் பெரியவனே புறப்படுக!

அந்தி சந்திகளில் அடியவரும் குஞ்சுகளும்
நொந்து வருந்தாமல் நோய்நொடிகள் காணாமல்
முந்திவந்து காப்பாற்றும் முத்துக் கருப்பண்ணனே!
செந்தமிழால் வணங்குகிறோம் திருவருளைத் தாருமய்யா.

வட்ட வழியுடைய வழிமறிக்கும் பிசாசுகளை
வெட்டிவிடும் வாளுடையாய்! விரைந்துவர வெள்ளைநிற
நெட்டைப் பரியுடையாய் நெடுமீசை அழகுடையாய்!
மட்டவிழும் மார்புடையாய்! மனைகாக்க வேண்டுமய்யா!

தப்பேது செய்தாலும் தாய்போல் பொறுத்திடுவாய்
முப்போதும் உன்னடியை முத்தமிழால் வாழ்த்துகிறோம்
அப்பா! கருப்பய்யா! அணைத்துவரும் நாயகமே!
எப்போதும் அருகிருப்பாய்; எங்கள்குடி காத்தருள்வாய்!

கண்முன்னே தோன்றிக் காப்பாற்றும் கருப்பய்யா!
பண்ணாலே தண்டனிட்டுப் பாதத்தைப் போற்றுகிறோம்
விண்பொழியும் மழைபோல வெயிலுக்குக் குடைபோலக்
கண்ணாலே அருள்பொழிந்து காப்பாற்ற வேண்டுமய்யா!

-டாக்டர் அர. சிங்காரவடிவேலன்