முருகன் என்ற சொல்லிலுள்ள மகிமை அறிந்தேன்

முருகன் என்ற சொல்லிலுள்ள மகிமை அறிந்தேன்
கருணையுள்ளம் கொண்ட அவனை என்றும் மறவேன் -
நான் என்றும் மறவேன்

முருகன் என்ற சொல்லிலுள்ள மகிமை அறிந்தேன்
கருணையுள்ளம் கொண்ட அவனை என்றும் மறவேன் -
நான் என்றும் மறவேன்
கருவறையில் முதன் முதலில் அவனை அறிந்தேன்
அன்னைவழி அவன் புகழை நாளும் உணர்ந்தேன்
தமிழ்க்கடவுள் முருகன் என்று கேட்டு வளர்ந்தேன்
அவனருளைப் பெற வேண்டி தினமும் முயன்றேன் (முருகன்)

அழகன் அவன் உருவினிலே மனமும் மயங்கும்
ஆறுபடை வீடு சென்றால் உண்மை விளங்கும்
அற்புதமாய் அலங்காரம் அழகு ஜொலிக்கும்
முத்தமிழால் போற்றுகையில் உள்ளம் இனிக்கும் (முருகன்)

பகையழித்து தீமைகளை அகல வைத்தவன்
அசுரர்களைக் களையெடுக்க வேல் எடுத்தவன்
இடரகற்றி காத்து நிற்கும் மயில் வாகனன்
சிக்கலின்றி வாழவைக்கும் சிங்கார வேலன் (முருகன்)

பக்தர்களின் பாசத்திலே மனம் களிப்பவன்
வளமனைத்தும் தந்து வாழ்வில் உயரவைப்பவன்
அபயமென்று குரல்கொடுத்தால் ஓடி வருபவன்
யாமிருக்க பயமேன்? என்று காத்து நிற்பவன் (முருகன்)

கார்த்திகைக்கும் சஷ்டிக்கும் விரதம் ஏற்பவன்
யாத்திரைக்கும் காவடிக்கும் காவல் நிற்பவன்
விசாகம் தைப்பூசம் உத்திரம் என
விதவிதமாய் விழாக்காணும் அழகு வேலவன் (முருகன்)

நேர்வழியில் சென்றால் அவனை நெருங்கமுடியும்
அன்பின் வழி அவனைத் தினம் அணுகமுடியும்
நல்லெண்ணம் கொண்டால் அவனை அறியமுடியும்
காலமெல்லாம் அவன் துணையை உணரமுடியும் (முருகன்)

அவன் நினைவில் வாழுவதில் ஆனந்தம்கொள்வோம்
அவன் பாடல் பாடுவதில் பரவசம்கொள்வோம்
அருள் வேண்டி தினமுமவன் காலடி தொழுவோம்
வள்ளல் அவன் தரும்வரத்தால் வாழ்வில் உயர்வோம் (முருகன்)

வெ.இராகவன், 12 ஜனவரி, 2011