வருகைப் பத்து

காப்பு

தங்கத்தில் காப்பு தரள மணிக்காப்பு
பொங்கும் கடல்முத்துப் காப்பென்ற - இங்குள்ள
எத்தனை காப்பும் எனைக்காவா ஆதலினால்
முத்தய்யன் காப்பே முதல்

பதிகம்

வீடு விளங்கிடவே வெற்றிக் கொடிபெறவே
நாடு நலம்பெறவே நாளும் வளம்பெறவே
பாடும் தமிழ்கேட்டுப் பக்தருக்கு அருள்புரிய
ஆடும் மயிலேறி அய்யா வருவாயே!

எங்கும் துணையின்றி எப்பொழுதும் வாடுகின்றேன்
அங்கும் இங்குமாக அலைந்தே தேடுகின்றேன்
பொங்கும் தமிழ் கேட்கும் பொன்பழநி ஆண்டவனே
தங்க மயிலேறித் தங்க வருவாயே!

எத்தனைநாள் எதிர்பார்த்தோம் ஏன்இன்னும் வரவில்லை!
சித்தத்தில் உனைத்தானே தினந்தோறும் சித்தரித்தோம்
பள்ளத்தில் கிடக்கும்எங்கள் பாவத்தைப் போக்கிடவே
வெள்ளி மயிலேறி விரைந்து வருவாயே!

ஏலம் கூவுகின்றார் என்பயெரை உறவினர்கள்
ஓலம் இடுவதும் உன்செவியில் உரைக்கலையோ?
ஆலம் உண்டவனின் அழகுத் திருக்குமரா!
நீல மயிலேறி நீந்தி வருவாயே!

ஏறுமயில் ஏறிவினை மாறுபட அருள்பொழியும்
ஆறு முகம்அன்றி வேறுமுகம் கண்டதில்லை
அச்சத்தை நீக்கி அடியவர்க்கு வாழ்வுதரப்
பச்சை மயிலேறிப் பறந்து வருவாயே!

வள்ளி மயிலவளின் வாட்டத்தைத் தீர்த்தவனே!
கள்ளமிலாக் கன்னியர்கள் கல்யாணம் ஆகாமல்
உள்ளம் வருந்தி உருக்குலைந்தார் துயர்நீக்கப்
புள்ளி மயிலேறிப் புறப்பட்டு வருவாயே!

நாகைப் பட்டினத்தில் நங்கூரம் பாய்ச்சிநிற்கும்
வாகைக் கப்பலேறி வளர்வணிகம் செய்குலத்தின்
பாகம் நிலை பெறவே பழநிமலை வேலவனே!
தோகை மயிலேறித் தொடர்ந்து வருவாயே!

தண்டா யுதபாணி தனைநாங்கள் குன்றேறிவந்து
கண்டு மனம்மகிழ்ந்து கண்ணீர் அபிஷேகம் செய்து
கொண்டாடும் முன்பே கந்தா உனைவணங்கக்
கொண்டை மயிலேறி இங்கே வருவாயே!

நாளும் ஒவ்வொன்றாய் நடக்கிறது உலகிலெந்த
ஆளும் உதவவில்லை அச்சம் அகலவில்லை
வேலவனே! எம்வாழ்வில் வெற்றிகளை விரைவாகக்
கோல மயிலேறிக் கொடுக்க வருவாயே!

நிலவு முகமுடையாய்! நீங்காமல் எம்வாழ்வில்
உலவும் துயரத்தை ஒருநொடியில் மாற்றிவிட
பழகு தமிழாலே பாப்பாடிக் கூப்பிட்டோம்
அழகு மயிலேறி அய்யா வருவாயே!

கவிஞர் மா. கண்ணப்பன்