வர வேண்டும் வர வேண்டும்

வரவேண்டும் வரவேண்டும் செந்தில் வடிவேலா-வரம்
தரவேண்டும் தரவேண்டும் செந்தில் வடிவேலா


தாங்கரிய துன்பம் வந்தால் செந்தில் வடிவேலா-நீ
தாயாக வரவேண்டும் செந்தில் வடிவேலா
ஏங்கியழும் போது தேற்ற செந்தில் வடிவேலா-நீ
எந்தையாக வரவேண்டும் செந்தில் வடிவேலா!

வருகின்ற நோய் தீர்க்க செந்தில்வடிவேலா-நீ
மருந்தாக வரவேண்டும் செந்தில் வடிவேலா
அருவினையைத் தீர்ப்பதற்குச் செந்தில் வடிவேலா-நீ
ஆள்வினையாய் வரவேண்டும் செந்தில் வடிவேலா!

மயங்கு வயதடையும் காலம் செந்தில் வடிவேலா-நீ
மகவாக வரவேண்டும் செந்தில் வடிவேலா
தயங்குநிலை வந்தநேரம் செந்தில் வடிவேலா-என்
தம்பியாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!

அவலம்வரும் நேரம்கண்டு செந்தில் வடிவேலா-என்
அண்ணனாக வரவேண்டும் செந்தில் வடிவேலா
தவழுமுள்ளக் கருத்தைச்சொல்ல செந்தில் வடிவேலா-நீ
தமிழாக வரவேண்டும் செந்தில் வடிவேலா.

வானம் பார்க்கும் உழவருக்குச் செந்தில் வடிவேலா-நீ
மழையாக வரவேண்டும் செந்தில் வடிவேலா
நானடையும் தீங்ககல செந்தில் வடிவேலா-என்
நண்பனாக வரவேண்டும் செந்தில் வடிவேலா

அறியாமை சூழ்ந்தபோது செந்தில் வடிவேலா-நீ
அறிவாக வரவேண்டும் செந்தில் வடிவேலா
நெறியாவும் முடியும்போது செந்தில் வடிவேலா
நீயேதான் வரவேண்டும் செந்தில் வடிவேலா!

கடலோடி மயங்குவார்க்கும் செந்தில் வடிவேலா-நீ
கலமாக வரவேண்டும் செந்தில் வடிவேலா
உடல்வாடும் ஏழைவாழ செந்தில் வடிவேலா-நீ
உறுதுணையாய் வரவேண்டும் செந்தில் வடிவேலா!