தேவகோட்டை வெள்ளிக்கிழமை சாமிவீட்டு லெட்சுமி ஆத்தா

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்


வெள்ளிக் கிழமையுன் வீடுதனை மெழுகியே
விளக்கேற்றி வைத்து வருவார்
துள்ளிவரும் வேல்போல துயர்துடைக்க வந்திடும்
துணையாக நீ இருப்பாய்!
மல்லிகை முல்லையுடன் மலரெல்லாம் சூட்டியுன்
மலர்ப்பாதம் பணிந்துநிற்பார்
கல்லிதயம் கொண்டாரைக் கனிவாக மனம்மாற்றிக்
காவலாய் நீ இருப்பாய்!
கள்ளிருக்கும் பூவிலே கண்மயங்கும் வண்டாக
களிப்போடு பார்த்திருப்போம்
அள்ளிக்கொடுக்கின்ற அன்பாலே உனைநாங்கள்
ஆசையுடன் நாடிவந்தோம்
உள்ளத்தில் இருத்தியே உறவுகள் மேம்பட
உன்னருள் வேண்டிநின்றோம்
வெள்ளமென அருள்பொழிந்து வியக்கவே வைக்கிறாய்
லெட்சுமி ஆத்தாஉமையே!

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

இறையருளால் ஆக்கம்
திருமதி முத்துக்கருப்பாயி சபாரெத்தினம்
காரைக்குடி