அப்பனும் சுப்பனும்

அப்பன் பெற்ற பிள்ளை ஒப்பு ஏதும் இல்லை
சுப்பனென்ற பேரை சொல்லி சொல்லிப்பாடு. (அவன்)

அம்மா கொடுத்த வேலு அரக்கருக்கே ஆளு!
நம்ம நாட்டு முருகு நாதம் கேட்டு உருகு (அப்பன்)

ஆறுமுகம் அழகு அடியெடுத்துப் பழகு
பாரு பாரு பழநி பருகப் பருக இளநி (அப்பன்)

வேதம் படித்த பிள்ளை வேறு ஏதும் இல்லை
வேற் பிடித்த பிள்ளை வேண்டு வரம் கொள்ளை (அப்பன்)

கருணை மனம் தங்கம் கண்ணில் அருள் பொங்கும்
சிறுவன் இந்த வேலன் சிந்தனை தந்த பாலன் (அப்பன்)

புகழில் ஆடும் குமரன் புவியில் கூடும் அமரன்
சிவமும் நாடும் விமலன் சித்திர முத்துக் கமலன் (அப்பன்)

வசந்தராகம் பாடி வருவோம் உன்னைத் தேடி
வசந்தம் பூத்துக் குலுங்க வரங்கள் தரும் முருகா (அப்பன்)

காவடிச் சிந்து பாடும் கருணை மனம் கூடும்
பாவடி கேட்டு மயங்கும் பாதம் கண்டு வணங்கும் (அப்பன்)

தேரில் ஏறி வருவான் தெள்ளு தமிழ் தருவான்
பாரில் முருகன் தெய்வம் பாடிப் பாடி உய்வோம் (அய்யன்)