ஆறுபடை கொண்ட நாயகனே

ஆறுபடை கொண்ட நாயகனே
ஆறுதல் தந்திடும் வேலவனே


தைப்பூச நாளிலே தந்தானா தந்தானா
காவடி தோளிலே தந்தானா தந்தானா
ஏந்திவந்தோம் உந்தன் பழனிமலை
கந்தவடிவேலா… சிவ சக்தி உமைபாலா…
கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா (ஆறுபடை)

நடக்கும் அனைத்தும் உன்னால் என்பதை முருகா நானும் உணர்ந்தேனே
இன்னாளில் நான் படும் துயரங்கள் எல்லாம் உன்வினைப் பயன் என அறிந்தேனே
மனக்கவலைகள் மலையெனக் குவிகையில் உள்ளம் உறைப்பது உன் நாமம்
சரவண பவ ஓம் ஓம் ஓம், சரவண பவ ஓம் (2)
கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா (ஆறுபடை)

கோலாகலமாக செட்டினாட்டில் காவடி முத்திரை வைத்தோமே
குன்றக்குடியில் வேலும் துணைவர பழனிமலை நோக்கி விரைந்தோமே
உன் திருப்புகழ் பாடி ஆனந்தமாக வழிநடைப் பயணத்தைத் தொடர்ந்தோமே
வேல் வேல் முருகா முருகா, வெற்றிவேல் முருகா முருகா (2)
கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா (ஆறுபடை)

செம்படப்பட்டி ஊஞ்சலிலே உன் திருமுகத்தைக் கண்டாலே
கைவலி, கால்வலி, மேல் வலி எல்லாம் பறந்துபோகும் தன்னாலே
இனிமைபொங்க இனிப்புடனே குழந்தையாகக் காட்சி தந்தாய்
குழந்தைவேலன் சந்நிதி சந்நிதி, கண்டால் நமக்கு நிம்மதி நிம்மதி (2)
கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா (ஆறுபடை)

ஞானப்பழமாக நீ அருள்கின்ற பழனிமலை ஏறி வந்தோமே
நவபாஷணத்தில் காட்சி தருகின்ற தெண்டாயுதனைக் கண்டோமே
ஆண்டியாய் நின்றாலும், அரசனாய் வந்தாலும் உன் அழகுக்கு இணை ஏதும் இல்லை
திருவடி சரணம் சரணம், அருள்தர வரணும் (2)
கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா (ஆறுபடை)

ஆறுபடை கொண்ட நாயகனே
ஆறுதல் தந்திடும் வேலவனே
தைப்பூச நாளிலே தந்தானா தந்தானா
காவடி தோளிலே தந்தானா தந்தானா
ஏந்திவந்தோம் உந்தன் பழனிமலை
கந்தவடிவேலா… சக்தி உமைபாலா…
கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா (ஆறுபடை)