ஆறெழுத்து மந்திரமாய் ஆனவன்

வேல் வேல்

முத்துமணி மண்டபத்து மெத்தனவே பூவிரித்து
மத்தியிலே வீற்றிருக்கும் மன்னவன்-அவன்
சித்துவிளை யாட்டினிலே சேர்ந்தவர்கள் வெற்றிபெற
சத்தியமாய்க் கைகொடுக்கும் மன்னவன்

மன்னவனின் மாமலையில் மாமுனிவர் சூழவர
மந்திரங்கள் போற்றுகிற மூலவன்-அந்த
மந்திரத்து மூலமதைத் தந்திரமாய் தந்தையர்க்கு
மந்திரித்துச் சொல்லிவைத்த வேலவன்

வேலெடுத்து வீறுகொண்டு வீணர்களும் ஓடவென்று
வெற்றிகண்டு விம்முகின்ற தோள்களே-அந்த
வேலவனை வேண்டிநிதம் வெற்றிகண்டு வாழவென்று
வேகமாகப் போகுதய்யா கால்களே

கால்கடுக்க நீநடந்த காரணத்தைக் கண்டுமிக
காரியமாய்க் கையினையே காட்டுவான்-அந்த
பால்கொடுக்கப் பாய்ந்துவரும் பாசமிகு தாயினைப்போல்
பார்வையினால் பாவங்களை ஓட்டுவான்

ஓட்டுகின்ற ஓசையிலே ஓமென்ற பாஷையிலே
ஒட்டுமொத்த மாயடங்கிப் போச்சுது-அதைக்
காட்டுகின்ற பாவனையில் காட்சிதரும் கந்தனையே
கால்கடுக்கக் கண்டுவர லாச்சுது

கண்டுவந்த காட்சியினைக் கந்தனவன் மாட்சிதனைக்
காணவந்த கண்களிங்கு கோடியே-நாம்
கொண்டுவந்த கோட்டையெல்லாம் கோலமயில் வாகனிடம்
கொட்டிவைத்துக் கும்பிடுவோம் நாடியே

நாடிவரும் நம்மளுக்கு நல்லகதிதான் கொடுக்க
நின்றபடி தண்டபாணி நிற்கவே-நிதம்
பாடிவரும் பக்தர்களும் பாவிசைக்க நாவசைக்க
பாலரிடம் பைந்தமிழைக் கற்கவே

கற்றவரும் மற்றவரும் உற்றவரும் ஓதுவது
கந்தனவன் ஆறெழுத்து மந்திரம்-கதி
அற்றவரும் அன்பொழுக ஆறுமுகம் பேருசொல்ல
அத்தனையும் அள்ளித்தரும் சுந்தரம்

சுந்தரத்து நாயகனை மந்திரத்து மாமணியைச்
சொல்லயினி வார்த்தைகளுமில்லையே-திரு
மந்திரத்து மாமணியை மால்முருகன் நல்மணியை
மண்டியிடச் சங்கடமும் இல்லையே

ஆறெழுத்து மந்திரத்தை நூறுதரம் சொன்னவர்க்கு
ஆறுமுகம் நேரில்வந்து தோன்றுமே-அவன்
ஈரெழுத்துப் பேருரைக்க ஈண்டுவரும் தொல்லைகளும்
இல்லையென்று இன்முகமும் தோன்றுமே

மூன்றெழுத்து மூலமதை முத்தமிழின் கோலமதை
முப்பொழுதும் கூறிவர வெற்றியே-தலை
தோன்றெழுத்து நேசமதும் தாண்டிவிடும் வேண்டியவை
தேடிவந்து சேரும் நம்மைச் சுற்றியே

வீறுபடை கொண்டுஅவன் வீணர்களை வீழ்த்திவிட்டு
வெற்றியொடு வந்தமர்ந்த வேலனே-அவன்
ஆறுபடை வீடுகளை நாடிவர நன்மைதரும்
ஆதிசக்தி பெற்றெடுத்த பாலனே

பாலகரும் பாவையரும் பால்முகத்துப் பேதையரும்
பாடிவந்து போற்றுவதும் உன்முகம் நாங்கள்
ஆலவட்டம் ஆடுவதும் அந்திசந்தி வாடுவதும்
ஆகாதென வேண்டுகிறோம் சண்முகம்

முத்துமணி ரத்தினங்கள் முன்முகப்புச் செம்பவள
மண்டபத்துக் கண்டயிரு தேவியே-உடன்
கொத்துமணி நாமமொடு கோலமயில் வேலுமோடு
கண்டவனை நாடிடுவோம் மேவியே.

-சோலை இராமச்சந்திரன், பள்ளத்தூர்