உன்னெழில் கோலம், என்னிரு கண்ணில், என்று தெரிந்திடுமோ
உன் மலர்ப்பாதம், என் தலைமீதில், என்று பதிந்திடுமோ
அம்மா என்று பதிந்திடுமோ

அன்னை உன்னருளால், என்னை மறந்து, இருந்திடும் நாள்வருமோ
பொன்னையும் பொருளையும், பூமியில் வாழ்வையும், வெறுத்திடும் நாள்வருமோ
அம்மா வெறுத்திடும் நாள்வருமோ

ஆசை என்னும், பேய்தனை விரட்டி, அருள்தர வருவாயா
அலைகடல் போலே, அலையுமென் வாழ்வில், அமைதியைத் தருவாயா
அம்மா அமைதியைத் தருவாயா

உலையினிலிட்ட, மெழுகாய் நானும், உருகித் தவிக்கின்றேன்
உன்னருள் வேண்டி, ஒவ்வொரு நாளும், பாடி துதிக்கின்றேன்
அம்மா பாடி துதிக்கின்றேன்

ஊரும் பேரும், உறவும் வேண்டேன், உன்னருள் வேண்டுகின்றேன்
உலகினிலிருக்கும், காலம் வரைக்கும், உன்துணை வேண்டுகின்றேன்
அம்மா உன்துணை வேண்டுகின்றேன்