எட்டடிக் குச்சு

வேல் முருகா வேல் வேல்-முருகா
வேல் முருகா வேல் வேல்


எட்டடிக் குச்சுக்குள்ளே-முருகா
எப்படி நானிருப்பேன்?
கொட்டி முழக்குகிறாய்!-முருகா
கும்பிட நீவருவாய்.

சோற்றுத் துருத்தியப்பா-முருகா
சொக்கத் தங்கமில்லை!
காற்றும் ஓடிவிட்டால்-முருகா
கட்டை விழுந்துவிடும்.

ஓட்டைக் குடிசையப்பா!-முருகா
ஒன்பது வாசலப்பா!
வேட்டை ஆடுகிறேன்-முருகா
வேதனை தீரவில்லை!

பாட்டைப் பாடுகிறேன்-முருகா
பக்திக்கு நீவருவாய்!
கோட்டை கொத்தளங்கள்-முருகா
கொடிகட்டிப் பறக்குதப்பா!

ஊத்தைத் தேகமப்பா-முருகா
உள்ளத்தில் வேகமப்பா!
பாத்து நடந்திடவே-முருகா
பாதையைக் காட்டிடுவாய்!

கண்ணுக்கு மையெழுதி-முருகா
கருத்துக்குப் பொய்யெழுதி
வண்ணக் கலவையிலே-முருகா
வழியும் தவறிடவோ?

சொல்லுக்குள் ஓடிவந்து-முருகா
சூட்சமம் ஆனவனே!
கல்லுக்குள் காந்தமய்யா!-முருகா
கட்டுக்குள் நிற்பவனே!

காவடிஆடயிலே-முருகா
காலடி ஆடுதய்யா!
பூவடி மணக்குதய்யா!-முருகா
புண்ணியம் கிட்டுதய்யா!


-கவிஞர் சி. என். நாச்சியப்பன்