கருமாரி அம்மன் பாடல்.

கற்பூர நாயகியே ! கனகவல்லி,
காளி மகமாயி கருமாரியம்மா,
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,
விற்கோல வேதவல்லி விசாலாட்சி,
விழிகோல மாமதுரை மீனாட்சி,
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே,
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே

புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி,
நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி,
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி,
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி,
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி,
உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி,
உன்னடிமைச் சிறியேனை நீ ஆதரி

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே ! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற,
அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா,
கண்ணீரை துடைத்து விட ஓடிவாம்மா,
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா,
சின்னவளின் குரல் கேட்டு முகம் திருப்பு,
சிரித்தபடி என்னை தினம் வழியனுப்பு

கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்,
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்,
பண்ணமைக்கும் நா உன்னயே பாட வேண்டும்,
பக்தியோடு கை உனையே கூட வேண்டும்,
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்,
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்,
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா,
மக்களுடைய குறைகளையும் தீருமம்மா

நெற்றியிலே குங்குமமே நிறைய வேண்டும்,
நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும்,
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்,
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்,
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்,
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்,
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லாமா?
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா?

அன்னைக்கு உபகாரம் செய்வதுண்டோ?
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ?
கண்ணுக்கு இமையின்றி காவலுண்டோ?
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ?
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ?
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ?
எண்ணைக்கும் விளக்குக்கும் பேதமுண்டோ?
என்றைக்கும் நான் உந்தன் பிள்ளையன்றோ?

அன்புக்கே நானடிமை ஆக வேண்டும்,
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்,
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்,
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்,
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்,
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்,
என் பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்,
என்னோடு நீயென்றும் வாழ வேண்டும்

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை,
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை,
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை,
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை,
செம்பவள வாயழகி உன்யெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை,
அம்பளவு விழியாளே உன்னை என்றும்!
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை

காற்றாகி கனலாகி கடலாகினாய்,
கருவாகி உயிராகி உடலாகினாய்,
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்,
நிலமாகி பயிராகி உணவாகினாய்,
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்,
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்,
போற்றாத நாளில்லை தாயே உன்னை,
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை.