சிங்கப்பூர் தண்டபாணி வருகவே

சிங்கப்பூர் தண்டபாணி வருகவே - எங்கள்
சிந்தை என்ற கோயிலுக்குள் வருகவே
சிங்கப்பூர் தண்டபாணி வருகவே - எங்கள்
சிந்தை என்ற கோயிலுக்குள் வருகவே


சிங்கப்பூர் தண்டபாணி வருகவே - எங்கள்
சிந்தை என்ற கோயிலுக்குள் வருகவே!
மங்கலங்கள் கோடிநல்க வருகவே - அன்னை
வள்ளிதெய்வ யானையோடு வருகவே!

காலடியில் தொண்டுசெய்யக் கூடினோம் - நல்ல
கந்தரனு பூதியினைப் பாடினோம்
வேலெடுத்த பிள்ளையுனைத் தேடினோம் - என்றும்
வெற்றிதரும் பாதமலர் நாடினோம்!

கங்கையிலே ஆறுமுகம் காட்டினாய் - அன்னை
கைகளிலே ஒருவடிவம் காட்டினாய்
சிங்கையிலே வேல்முகத்தைக் காட்டினாய் - எங்கள்
தீவினைகள் யாவினையும் ஓட்டினாய்!

வெள்ளித்தேர் ஏறிவரும் வேலனே - முன்பு
விண்ணோர்கள் சிறைமீட்ட பாலனே
உள்ளத்தேர் காத்திருக்க லாகுமோ - நீயும்
ஓடிவரத் தாமதமேன் ஐயனே

லயன்சித்தி கணபதியை வேண்டினோம் - உன்னை
நாடிவர யாவரையும் தூண்டினோம்
தயவாக கேட்கின்றோம் தேடிவா - எங்கள்
தமிழ்கேட்டு தலையசைக்க ஓடிவா

ஆடுகின்ற காவடிகள் தூக்கினோம் - இனி
ஆடாமல் நெஞ்சையுனக்கு ஆக்கினோம்
பாடிப்பாடிப் பாடிப்பாடிப் போற்றினோம் - தமிழ்ப்
பாட்டுக் காசைப்படுபவனே ஓடிவா

அணியணியாய்க் கொண்டுவிற்க வந்தவர் - முன்னர்
ஆண்டிவடி வாகஉன்னைக் கண்டனர்
மணமுடித்துக் குடும்பத்தோடு வாழ்கிறோம் - இன்று
வள்ளிமண வாளனாக ஓடிவா

நம்பிஉந்தன் திருப்புகழைப் பாடுவோம் - எங்கள்
நாயகனே வேறுயாரை நாடுவோம்
கும்பிட்ட கைகளுக்குள் இன்பமாய் - வந்து
குடியிருக்கும் வேல்முருகா வருகவே

களவுமணம் கற்புமணம் கண்டவா - அந்தக்
கன்னியர்மேல் காதல்மிகக் கொண்டவா
வளமிகுந்த சிங்கப்பூர் காணவே - உந்தன்
வள்ளி தெய்வ யானையரை கூட்டிவா

தைப்பூசக் காவடிகள் காணவா - எங்கள்
தமிழ்ப்பாட்டைச் செவிகுளிரக் கேட்கவா
கைப்பிடிக்குள் சிக்கிவிட்டாய் கந்தனே - உந்தன்
கால்பிடித்தோம் நீதான்எம் சொந்தமே

கால்கடுக்க ஓடிவந்தோம் பாரையா - எங்கள்
கந்தா! உன்நெஞ்மென்ன பாறையா?
பால்கொடுக்கத் தாய்மறுக்க லாகுமோ - இந்தப்
பாரிலிந்தப் பிள்ளைஎங்குப் போகுமோ

சார்ந்தவரைக் காப்பாற்றும் சாமியே - உந்தன்
தாள்மலரில் சுற்றுதிந்தப் பூமியே
சேர்ந்திருக்க வேண்டுமென்ப திச்சையே - எங்கள்
செல்வமெல்லாம் நீகொடுத்தப் பிச்சையே


சொல்லோவியர், விரிவுரை வித்தகர்,
திருமந்திரச் சொல்மணி, நற்றமிழ் நாவலர்,
திருக்கயிலை மணி, பொற்கிழிக் கவிஞர்
சொ.சொ.மீ.சுந்தரம்.
1-1-2008