சிந்தை இரங்காதோ? சேதி வழங்காதோ?


சிறுவா புரியில் முருகா உனது
சிந்தை இரங்காதோ?-நல்ல
சேதி வழங்காதோ?-நீ
பெறுவாய் தமிழை! தருவாய் அருளை!
பேரம், சரியலையோ?-எனது
பெருமான் நீஇலையோ?


வாய்பே சாத ஊமையும் உனது
வாசலில் பேசியதாம்!-கவிதை
வண்ணம் பாடியதாம்!-இந்தச்
சேய்பே சிவரும் பேச்சில் முருகா,
சிலையாய் ஆயினையோ?-ஊமைச்
செவிடாய்ப் போயினையோ?

வேலால் நடந்த கதைஉன் கதைஅது
விந்தை கதையாகும்!-உலகம்
வியந்து துதிபாடும்!-இன்று
காலால் நடந்து கதைஎன் கதைஎது
கண்ணீர்க் கதையாகும்!-உலகம்
கண்டு நகையாடும்!

எத்தனை எத்தனை தாயர் வயிற்றில்
ஏழை கிடந்தேனோ?- முருகா
இங்கு பிறந்தேனோ?-நான்
எத்தனை எத்தனை மாதர் சுகத்தில்
இதயம் களித்தேனோ?-இடர்
எய்தித் துடித்தேனோ?