தையல் நாயகி துதி

தையல்நாயகி அம்மா தையல்நாயகி-என்றும்
தாயாக இருப்பவளே தையல்நாயகி
ஊர் உலகம் காப்பவளே தையல்நாயகி
உன் பாதம் சரணடைந்தேன் தையல்நாயகி


குங்குமத்தில் ஒளிவீசும் தையல்நாயகி-முத்துக்
குமரனுக்கே தாயுமானாய் தையல்நாயகி
வைத்தியத்தின் சிகரமாம் தையல்நாயகி
வைத்தியனாதனுக்கே துணையுமானாய் தையல்நாயகி

தங்கமுத்து மண்டபத்தில் தையல்நாயகி- என்றும்
சிங்காரக் கொலுவிருக்கும் தையல்நாயகி
பொங்கிவரும் காவேரிபோல் தையல்நாயகி
தங்குதடை நீக்கிடுவாள் தையல்நாயகி

காட்டுவழி ஆனாலும் தையல்நாயகி
கனிவுடனே துணைவருவாள் தையல்நாயகி
கள்ளர்பயம் ஆனாலும் தையல்நாயகி
கலங்கவே விடமாட்டாள் தையல்நாயகி

மணமுடிக்கக் கேட்டுக் கொண்டால் தையல்நாயகி
மங்களமாய் முடித்து வைப்பாள் தையல்நாயகி
மழலைச் செல்வம் வேண்டுமென்றால் தையல்நாயகி
மகிழ்ச்சியுடன் தந்திடுவாள் தையல்நாயகி

மாடுமனை வீடுசுற்றும் தையல்நாயகி நீ
மனதுவைத்தால் வளரும் அம்மா தையல்நாயகி
காடுகரை தோப்புவயல் தையல்நாயகி
உன்கண்பட்டால் பொன்விளையும் தையல்நாயகி

அம்மா என்றே உனை அழைத்தால் தையல்நாயகி
ஆறுதலே பிறக்குதம்மா தையல்நாயகி
தாயே என்றுஉனை அழைத்தால் தையல்நாயகி
நோய் நொடிகள் நீங்குதம்மா தையல்நாயகி

பேறுபெறச் செய்தவளே தையல்நாயகி-எங்கள்
பிள்ளைகளைக் காக்கவேண்டும் தையல்நாயகி
தொல்லை எல்லாம் நீக்கவேண்டும் தையல்நாயகி-வாழ
நல்லவழி காட்டவேண்டும் தையல்நாயகி

கம்பூன்றி நடைநடந்து தையல்நாயகி-உன்னை
காணவே வருகின்றேன் தையல்நாயகி
தெம்புண்டு மனதினிலே தையல்நாயகி திவ்ய
தெரிசனமே தரவேண்டும் தையல்நாயகி

செய்யும் தொழில் சிறக்க வேண்டும் தையல்நாயகி
செல்வ வளம் பெருகவேண்டும் தையல்நாயகி
ஆறுநூறு ஆகவேண்டும் தையல்நாயகி-அதில்
ஆனந்தமே பொங்கவேண்டும் தையல்நாயகி

சங்கொலி முழங்கவேண்டும் தையல்நாயகி-என்
சந்ததியும் சிறக்கவேண்டும் தையல்நாயகி
மங்களமே பொங்கவேண்டும் தையல்நாயகி-என்றும்
மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் தையல்நாயகி

அம்மா என்றே உனை அழைத்துத் தையல்நாயகி
அடிபணிந்தேன் உந்தன்பிள்ளை தையல்நாயகி
என்னகுறை எனக்கினிமேல் தையல்நாயகி
எனக்குத்துணை நீஇருக்கத் தையல்நாயகி