பிள்ளையார் பட்டி வளர் பெருநிதியே கற்பகமே

பிள்ளையார் பட்டி வளர் பெருநிதியே கற்பகமே
அள்ளி அள்ளித் தருகின்ற அருள் நிதியே அற்புதமே !
உள்ளமார் அன்புக்கு உவந்திடுவாய் பொற்பதமே
வள்ளல் உன்னை நாடிவந்தோம் வாழ்த்திடுவாய் சிற்பரமே !

கல்லிலே முளைத்துவந்த கவின்தமிழே கலையழகே
கையிலே சிவனைவைத்து களிகூரும் சிலையழகே !
புல்லிலே மாலையிட்டால் பொலிவுதரும் மலையழகே
பொய்யெல்லாம் போயகல பொங்குமருள் தருவாயே !

காலையிலே உனைத்தொழுதால் கவலையெல்லாம் ஓடிவிடும்
மதியத்தில் தொழுதேத்த மதிஎல்லாம் குளிர்ந்துவிடும் !
மாலையிலே தொழுதவர்க்கு மனமெல்லாம் மகிழ்வுதரும்
இரவினிலே வணங்கிவந்தால் இனியநித் திரைகொள்ளும் !

சொக்கனையும் அம்மையையும் சொகுசாக வலம்வந்து
பக்குவமாங் கனிபெற்றாய் பாரேத்தும் தந்தமுகா !
எக்காலும் உனைத்தொழுது ஏத்திவந்த பேர்களுக்கு
மிக்கபுகழ் தான்தந்து மிடுக்கோடு வாழவைப்பாய் !

பாலாலும் தேனாலும் பக்குவமாய்த் தயிராலும்
பன்னீரும் இளநீரும் பழவகையும் கலந்துவைத்து
ஐயனுக்கு அபிஷேகம் சென்னியிலே பூவைத்து
செய்தன்பால் போற்றினார்க்குச் செய்தொழிலைச் சிறக்கவைப்பாய் !

ஆவணியின் சதுர்த்தியிலே ஆனைமுகன் திருவிழா
ஆவலுடன் மக்களெல்லாம் அணிதிரளும் பெருவிழா !
பாவணிகள் பாடிவரும் பெரும்புலவர் வரும்விழா
பாவையர்கள் நோன்பேற்க பலன்மிகவே தரும்விழா !

உருவத்தில் முழுவதுமாய் உயர்சந்தனக் காப்பினிலே
வருடத்தில் ஒருமுறைதான் வந்தழகைக் காண்பீரே !
வருந்துன்பம் விலகவைத்து வாழ்கயினைச் சீராக்கும்
பெருமைகள் சொல்லரிய பேரருளைப் பெறுவீரே !

அற்புதக் கலைகளெல்லாம் அவையினிலே அரங்கேற்றம்
ஐயன்மேல் கவிபுனைந்தால் ஆனந்தப் பூந்தோட்டம் !
கற்பகத்தின் தனிப்பெருமை காணவரும் பெருங்கூட்டம்
கையெல்லாம் வடம்பிடிக்க கட்டழகுத் தேரோட்டம் !