மயிலே மயிலே நீ ஆடு

மயிலே மயிலே நீ ஆடு
மயிலே மயிலே நீ ஆடு-எங்கள்
மன்னவன் புகழை நீ பாடு


மயிலே மயிலே நின்றாடு
மன்னவன் முருகனை மன்றாடு
தென்னவன் மகிழ்ந்திட நீ பாடு
சேவற்கொடியுடன் சேர்ந்தாடு!

செந்தமிழ் கீதம் நான் பாட
சந்தனக் காவடி தானாட
இந்திரன் கொலுவில் மீனாட
தந்தன தாளங்கள் சேர்ந்தாட

கல்லும் மரமும் கனிந்தாட
காவிரி வெள்ளம் புரண்டோட
உள்ளும் புரமும் ஒன்றாக
புள்ளி மயிலே நின்றாடு!

துன்புரு நாரதர் வந்தாட
துவாரகை கண்ணன் குழலூத
பண்பாய் வேலவன் கலந்தாட
படை வீடாற்றிலும் நின்றாடு

தங்கச் சரப்பளி பூண்டவனை
தணிகை மாமலை ஆண்டவனை
திங்களை அணிந்தோன் திருமகனை
தினமும் போற்றி நின்றாடு!

கலைமகள் நாவில் கனிந்தாட
நிலைமகள் தரையில் புரண்டாட
அலைமகள் அச்சுத னுடனாட
மலைமகள் சரவணன் விளையாட

சரவணப் பொய்கையில் நானாட
சண்முக நதியினில் அவனாட
வையாபுரியில் நீயாட
வருவான் சரவணன் விளையாட

குயில்கள் பாடும் குரலோசை
கோகுல கிருஷ்ணன் குழலோசை
பஜனை பாடும் பண் ஓசை
பழநிக் கோயில் மணியோசை

பாடலைப் படித்தால் பலனுண்டு
படிப்பதைக் கேட்டால் நலமுண்டு
தினமும் படித்தால் செல்வமுண்டு
பழநி முருகனின் அருளுண்டு

-எஸ். இராஜலெக்ஷ்மி, காரைக்குடி.