ஸ்ரீ செந்திலாண்டவர் பதிகம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்


பேர்படைத்த கந்தனே! பிரான்படைத்த செல்வனே
சூர்படைத்த ஆணவத்தைத் தூள்படைத்த வீரனே!
சீர்படைத்த செந்தமிழ் தினம்படைக்க அருளுவாய்
கூர்படைத்த வேலவனே! குலாவு செந்தில்நாதனே!1

ஆறுகோணச் சக்கரம்; அமைந்த ஆறும் அட்சரம்;
ஆறுவாசல் தத்துவம்; அவைகடந்த அற்புதம்
ஆறும், ஆறும், ஆறும், ஆறும், ஆறும், ஆறும் ருபனே
ஆறுதாயார் பாலனே! கண் பாரும் செந்தில் நாதனே!2

அகம்குழைந்த சங்கரன் புயங்கமாலை பாடினான்
புகுந்த ஏவள் காசநோய் அகன்றுநன்மை எய்தினான்
இகம்பரம் இரண்டிலும் நலம்தரும் மகேசனே!
சுகந்த கந்த புஷ்பமே உவந்த செல்தில் நாதனே!3

ஆதிநாதன் மறைத்திறம் அறிந்திலேன் அறிந்திலேன்;
காதலான செந்தமிழ்க் கருத்தையும் உணர்த்திலேன்;
பேதைநான் தினம்தினம் பிதற்றலும் தணிந்திலேன்;
ஈதுநீ பொறுத்தருள் இசைந்த செந்தில் நாதனே!4

மூங்கைபால் இரங்கியே முழங்கவைத்த தேவனே!
தாங்கொணா வயிற்று நோய் தனித்தசக்தி பாலனே!
ஏங்கி, ஏங்கி, ஏங்கி, ஏங்கி எய்தினேன் என் ஈசனே!
தீங்கெலாம் விலக்குவாய் சிறந்தசெந்தில் நாதனே!5

தொல்லைசெய்யும் நோய் இல்லை; துயர்பகை வினை இல்லை;
அல்லல் செய்யும் தீயசக்தி அட்டமத்துச் சனி இல்லை;
இல்லைஇல்லை என்றுபூசும் இலையில்நீ றலாமலே
செல்வமேதும் இல்லையே திகழ்ந்தசெந்தில் நாதனே!6

வேறுவேறு மந்திரங்கள் ஆறெழுத் தடக்கமாம்;
மாறுதேவ தேவியர்நின் வடிவிலே அடக்கமாம்;
கூறுபத்தும் ஆறுமான பேறுநல்கும் ஈசனே!
தேறும் என்னை ஆதரிக்க வாரும்செந்தில் நாதனே!7

தொட்ட தொட்ட இடமெலாம் துலங்கு கின்ற ஜோதியே!
முட்டமுட்ட மடியிலே முகந்தளிக்கும் தேனுவே!
எட்டஎட்ட நிற்பதென்ன ஏழைகள்பங் காளனே!
கிட்ட கிட்ட வாரும் என்னை ஆளும் செந்தில் நாதனே!8

மாரனைத் தகித்த எந்தை மைந்தனான கந்தனே!
சூரனைக் கிழித்துவாகை சூடும்வெற்றி வேலனே!
சோரணை, எனைவருத்தும் துட்டனைத் தொலைக்க நீ
வீரவேல் எடுத்தல்வேண்டும் வேண்டும் செந்தில்நாதனே!9

அஞ்சிநான் நடுங்கும் போதில் அழகுவேல் எடுத்துவா
வஞ்சமாம் அகப்பகை புறப்பகை மடித்துவா!
சஞ்சலங்கள் போக்கிவா! என் நெஞ்சில் இன்பம் தேக்கிவா!
தஞ்சமென்று சேடன்வந்(து) இறைஞ்சும் செந்தில்நாதனே!10

அழிவாய் இருந்தவா! அருந்தவா ஆண்டவா!
காழிவாய்ப் பிறந்து ஞான காணமே பொழிந்தவா!
வாழி! தாயார் சூழவேண்டும் வரமெலாம் வழங்கவா!
ஊழிநாதன் பூசனை உவந்த செந்தில் நாதனே!11


-அருட்கவி கு.செ. இராமசாமி